மோடி சொன்ன ஒரு வார்த்தை.. சீனா ஜே10 போர் விமான நிறுவனத்துக்கு விழுந்த அடி.. பாகிஸ்தானால் சோதனை
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு மேற்கொண்ட ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மோடி சொன்ன வார்த்தையின் காரணமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் ஜே 10 என்ற சீனாவின் போர் விமானத்தை தயாரிக்கும் அவிக் செங்டு பங்குவின் விலை மளமளவென சரிந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:
கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணை வீசி நாம் அழித்தோம். ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த நடவடிக்கை என்பது கடந்த 7 ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு முயன்றது. இது நம் நாட்டின் முப்படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏவுகணை தாக்குதல் வழியாக நம் நாடு பாகிஸ்தானின் 3 விமானப்படை தளத்தை அழித்தது.
அடுத்தடுத்து விழுந்த அடியால் பாகிஸ்தான் கதற தொடங்கியது.
இருநாடுகள் இடையே பதற்றம் உச்சமடைந்த நிலையில் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. அதன்பிறகு நம் நாடும் போரை நிறுத்துவதாக அறிவித்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அப்போது பிரதமர் மோடி, ‛‛அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. பயங்கரவாதமும், வர்த்தகமும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக கொண்டு செல்ல முடியாது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் செயலிழந்து கீழே விழுந்ததை உலகம் கண்டது. நம் நாட்டின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை வானத்திலேயே அழித்துவிட்டது. பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க நமது நாட்டின் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தோம். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் நமது வீரர்கள் ஈடு இணையற்ற வீரத்தைக் காட்டியுள்ளனர்.
இன்று நான் அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் போற்றுகிறேன். இந்த வீரத்தை நமது நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டடங்கள் மட்டுமல்ல, அவர்களின் அசட்டு தைரியமும் சின்னாபின்னமானது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்துவிட்டது " என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சை தொடர்ந்து ஜே 10 எனும் போர் விமானத்தை தயாரிக்கும் சீனாவின் அவிக் செங்டு ஏர்கிராப்ட் என்ற நிறுவனத்தின் பங்குகளின் விலை மளமளவென நேற்று சரிய தொடங்கியது. அவிக் செங்டு ஏர்கிராஃப்ட் பங்குவின் விலை நேற்று இண்ட்ராடே வர்த்தகத்தில் 9.31 சதவீதம் வரை சரிந்து 86.93 யுவானாக இருந்தது. அதேவேளையில் இந்திய பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகளின் விலை என்பது அதிரடியாக உயர்ந்தது. இதற்கு பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை தான் காரணமாகும்.
அதாவது நம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ‛‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது'' என்று கூறினார். இதுதான் சீனாவின் ஜே 10 போர் விமான நிறுவனத்தின் பங்குவின் மதிப்பை சரிய வைத்துள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் சீனாவின் ஜே 10 போர் விமானத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானத்தை நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதனை அந்த நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் உறுதி செய்திருந்தார்.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றி என்று பிரதமர் மோடி கூறியதால் ஜே 16 ரக போர் விமானத்தை தயாரிக்கும் சீனாவின் அவிக் செங்டு ஏர்கிராப்ட்டின் பங்குகளின் விலை அதிரடியாக சரிந்தது. முன்னதாக கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் நாடு தொடங்கிய பிறகு தொடர்ந்து சில நாட்கள் ஜே 10 போர் விமானத்தின் பங்குகளின் விலை என்பது கிடுகிடுவென அதிகரித்தது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஜே 10 விமானத்தை பயன்படுத்தும் என்பதால் அந்த பங்குகளின் விலை 60 சதவீதம் வரை எகிறியது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நம் நாடு வென்றதால் ஜே 10 விமான நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications