டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் 2-வது நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர் போராட்டம்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் 2-வது நாளாக இன்றும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளியால் இரு சபைகளும் முடங்கின. இதனையடுத்து லோக்சபா, ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதால் மொத்தம் 24 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் மொத்தமாக 24 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் காந்தி சிலை அருகில் 50 மணிநேர தொடர் போராட்டத்தை யும் 24 எம்.பிக்கள் தொடங்கினர். இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. விடிய விடிய நடைபெற்ற இப்போராட்டத்தில் எம்.பி.க்கள் அங்கேயே படுத்தும் உறங்கினர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் மன்னிப்பு கேட்டால், சபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சாந்தா சேட்ரி கூறுகையில், நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை; எதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக குரல் எழுப்பியவர்கள் நாங்கள். விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்சனையைத்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பினோம். அதில் என்ன தவறு என பதிலளித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் இன்றும் 2-வது நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் தொடருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நடைபெறும் இப்போராட்டத்தில் மேலும் பல எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications