அக்னிபாத் டூ நீட் வரை.. மத்திய அரசு திட்டங்கள் மீது விமர்சனங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்!
டெல்லி: 18வது நாடாளுமன்ற குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நீட், அக்னிபாத் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைத்திருக்கிறது. நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஜூன் 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியிருந்தார். அவர் பேசியதில் பல விஷயங்கள் கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக
"பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்" என்று குடியரத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், 'பெரும்பான்மை பலத்துடன்' எனும் வார்த்தையை குடியரசுத் தலைவர் எப்படி பயன்படுத்தலாம்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து பேசிய முர்மு, "நீட் போன்ற தேர்வுகளில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டித்து தண்டிக்கும். தற்போது உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு அரசியல் கட்சிகளின் முரண்பாட்டிற்கு அப்பாற்பட்டு தீர்வு எட்டப்பட வேண்டும். தற்போது முறைகேடுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
அதேபோல வடகிழக்கு குறித்து, "வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4 மடங்குக்கு மேல் நிதியை உயர்த்தியுள்ளது. அனைத்து வகையான இணைப்புகளும் வடகிழக்கு வரை நீட்டிக்கப்படுகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என பேசியிருந்தார்.
நீட் குறித்து அவர் பேசும்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட், நீட் என முழக்கமிட்டனர். அதேபோல வடகிழக்கு குறித்து பேசிய முர்மு, மணிப்பூர் குறித்து பேசாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்ற அவை கூடுகிறது. இதில் நீட், மணிப்பூர், அக்னிபாத் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல, டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை 25% வரை அதிகரித்துள்ளன. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4G சேவை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மக்களவையில் ஜூலை 2ம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 3ம் தேதியும் பிரதமா் மோடி பதிலளிப்பார். பின்னர், தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடர் ஜூலை 3ம் தேதியுடன் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications