இணைந்த தெ.தேசம் எம்பிக்கள்.. பிற கட்சி எம்பிக்களுக்கு வலை.. பாஜவின் செயலால் கிலியில் எதிர்க்கட்சிகள்
டெல்லி: தெலுங்குதேசம் எம்பிக்கள் 4 பேர் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை செயலகம் அங்கீகரித்துள்ள நிலையில், பாஜகவின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணியின் பலம் 105 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 18 எம்பிக்கள் இருந்தால் முழுமெஜாரிட்டியை மாநிலங்களவையில் பாஜக பெற முடியும் என்பதால், மற்ற கட்சி எம்பிக்களுக்கும் பாஜக வலை விரித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பயத்தில் உள்ளன.
ஆந்திராவில் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. மத்தியில் பாஜக கூட்டணி அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தது.
ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத கோபத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஓராண்டுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். காங்கிரஸ் உடன் நெருக்கடிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மக்களவை தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது.

பாஜகவில் இணைந்த எம்பிக்கள்
இதனால் முதல்வர் பதவியை இழந்து சோகத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக தலைமை மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கு மொத்தம் 6 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். இதில் ஒய்எஸ் சவுத்ரி, சிஎம் ரமேஷ், ஜி மோகன் ராவ், டிஜி வெங்கடேஷ் ஆகிய 4 மாநிலங்களவை எம்பிக்கள் திடீரென பாஜகவில் இணைந்தனர். இதனால் தெலுங்கு தேசத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.

ஏற்றார் வெங்கையா நாயுடு
பாஜகவில் இணைந்த 4 எம்பிக்களும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை நேற்று முன்தினம் சந்தித்து தங்களை பாஜக எம்பிக்களாக அங்கீகரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 4இல் 3 பங்கு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவியை பறிக்க முடியாது. இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்தார். இதனால் தெலுங்கு தேசத்தின் 4 எம்பிக்களை பாஜக எம்பிக்களாக மாநிலங்களவை செயலகம் அங்கீகரித்தது.

18 எம்பிக்கள் தேவை
மாநிலங்களவையில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. தற்போது 4 எம்பிக்கள் பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணி எம்பிக்கள் பலம் 105 ஆக உள்ளது. இன்னும் 18 எம்பிக்கள் ஆதரவு பெற்றால் மாநிலங்களவையில் பாஜக முழுமெஜாரிட்டி பெற்றுவிடும். ஆனால் பாஜக மாநிலங்களவையில் முழு மெஜாரிட்டி பெறற அடுத்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.

வலைவிரிக்கும் பாஜக
அதுவரை காத்திருந்தால் சட்டங்களை நிறைவேற்றுவது மசோதக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என பாஜக கருதுகிறது. இதனால் பாஜக முழு பலத்தை இப்போ பெற பிறகட்சி எம்பிக்களை தங்கள் கட்சிக்கு இழுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் கிலியில் உள்ளன. பாஜகவின் இந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.












Click it and Unblock the Notifications