அவ்ளோதான்? முடிஞ்சுபோச்சு.. கர்நாடகா தேர்தலில் எடப்பாடிக்கு 'சிக்கல்'.. புகழேந்தி சொல்லும் பாயிண்ட்!
டெல்லி : அதிமுக விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவே அமைந்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் 20ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்காது என்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு தான் என்கிறது ஓபிஎஸ் தரப்பு.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி ஏப்ரல் 20 வரை நடைபெறுகிறது. பெங்களூர், கோலார், மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பல இடங்களில் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு தமிழர்களின் வாக்கு உள்ளது. ஏற்கனவே அதிமுக சில இடங்களில் அங்கு வென்றுள்ளதால், இப்போதும் அங்கு போட்டியிட ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவருமே திட்டமிட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி செல்வாக்கு பெற்றவராக விளங்குவதால் ஓபிஎஸ் அணி நிச்சயம் களமிறங்கும் எனக் கூறப்படுகிறது. இருவரும் களமிறங்கினால் சின்னம் சிக்கல் ஏற்படும். கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை கிடைக்கும் வகையில் ஏ பார்ம், பி பார்ம் ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரத்தை தனக்கு தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார்.

எடப்பாடி வழக்கு : பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுகவின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பில், கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
ஏற்கனவே கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரினார்.
10 நாட்கள் : இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, "ஏற்கனவே பல முறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இப்படியே சொல்லி வருகின்றனர். ஆனால் முடிவெடுக்கவில்லை. கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது" என்று வாதம் வைத்தது.
அப்போது குறுக்கிட்ட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், "சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக்கூடாது. நாங்களும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

எடப்பாடிக்கு சிக்கல் : வேட்பு மனு தாக்கல் இன்னும் 8 நாட்களில் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால், அதற்குள் முடிவு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, சின்னம் வழங்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய விவரங்களின்படி தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்து போடவேண்டி இருக்கும். இல்லையெனில் சின்னம் கிடைக்காது என்ற சூழல் உள்ளது.
இதுதொடர்பாகப் பேசியுள்ள அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, "10 நாட்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துவிட்டது டெல்லி ஐகோர்ட். இனி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும். இனி கோர்ட்டுக்கு எந்த வேலையும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கிவிட்டால் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது. மக்கள் மன்றத்தில் சந்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications