மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்தது.. ஆன்லைன் செய்தி மற்றும் ஓடிடி தளங்கள்.. அரசு முடிவு!
டெல்லி: நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் செய்தி தளங்களும் அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடக்க காலத்தில் தொடர்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த நிலையில்.. தற்போது புதிய படங்கள், கிரிக்கெட் தொடர்கள் என்று பல விஷயங்கள் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களில் வெளியாகி வருகிறது.
நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ என்று நிறைய தளங்கள் இந்தியாவில் மக்கள் இடையே பிரபலமாக இருந்து வருகிறது.

சென்சார் இல்லை
சென்சார் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் இது போன்ற தளங்கள் செயல்பட்டு வந்த நிலையில்.. தற்போது இந்த ஆன்லைன் மீடியா தளங்கள் எல்லாமே மத்திய அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின்படி நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் செயல்படும்.

மாற்றம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். ஓடிடி தளங்கள் மட்டுமின்றி ஆன்லைன் நியூஸ் தளங்கள், டிஜிட்டல் கன்டென்ட் தளங்கள் ஆகிய தளங்களும் கூட மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இதனால் இதில் வெளியாகும் நிகழ்ச்சிகள், கண்டென்ட்களை அரசு பரிசோதிக்க, கணிக்க முடியும்.

கட்டுப்பாடு
அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த தளங்கள் இனி செயல்படும். ஆனால் இதில் வரும் நிகழ்ச்சிகள் சென்சார் செய்யப்படுமா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எதிர்காலத்தில் சென்சார் செய்யப்படுவதற்கான முதல் படி இதுதான் என்று கூறப்படுகிறது.

புகார்கள்
இந்த ஓடிடி தளங்களுக்கு எதிராக அவ்வப்போது புகார்கள் வந்தது. இதில் வெளியாகும் தொடர்களுக்கு எதிராக அவ்வப்போது சிலர் குரல் கொடுப்பது உண்டு. இந்த நிலையில் தற்போது மொத்தமாக மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் இந்த தளங்கள் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications