60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏன் கிரெடிட் கார்டு தருவது இல்லை? வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று பேசிய காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் வங்கிகள், அவர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுப்பது இல்லை எனவும், 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க வேண்டாம் என ஆர்பிஐ சொல்வது வினோதமாக தெரிவதாகவும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 22ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கடந்த மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் அவ்வப்போது காரசார விவாதங்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே நடைபெறுகிறது.

அந்த வகையில் ராஜ்யசபாவில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ரேணுகா பேசினார். அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வங்கிகள் கொடுப்பது இல்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். ரேணுகா எம்பி பேசியதாவது:-
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடன்பெற தகுதி கொண்டவர்களாக கருத வேண்டாம் என வங்கிகளுக்கு ஆர்பிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே எங்களுக்கு கிரெடிட் கார்டு வசதி கிடைப்பது இல்லை. ஆனால், எங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை பயன்படுத்தி வருமானத்தை வங்கிகள் ஈட்டுகின்றன. டெபிட் கார்டுகளை வழங்கிவிட்டு கிரெடிட் கார்டு வழங்காமல் இருப்பது வினோதமான கான்செப்ட் ஆக உள்ளது.
மூத்த குடிமக்கள் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்கள் புக்கிங், ஆன்லைன் பரிவர்த்தனை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் டிஜிட்டல் இந்தியா ரொக்கமில்லா பரிவர்த்தனை என்கிறீர்கள். இன்னொரு பக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுப்பது இல்லை. இங்குள்ள பல உறுப்பினர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்கிறது. அவர்களுக்கு தனிச்சலுகை உள்ளது.
ஆனால், சாதாரண குடிமகன்கள், போதுமான அளவு சேமிப்பு கணக்கில் பணம் வைத்து இருந்தாலும் கிரெடிட் கார்டுகள் கிடைப்பது இல்லை. சர்வதேச வங்கிகள் இந்த விதியை வெளிநாடுகளில், பின்பற்றுவது இல்லை. ஆனால், அதே வங்கிகள் இந்திய குடிமக்களுக்கு கிரெடிட் கார்டு விதிகளை காட்டி வயது உச்ச வரம்பு இருப்பதாக நிராகரிக்கிறார்கள்.
பல மூத்த குடிமக்கள் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிக்கிறார்கள். ஆரோக்கியமாக அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். எனவே இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகள் உடனே நீக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு எம்பி ரேணுகா பேசினார்.












Click it and Unblock the Notifications