உனக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? குறுக்க மறுக்க ஓடும் துருக்கி..விளாசிய ஓவைசி
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, இப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும், துருக்கியை நேரடியாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களை ஒடுக்கும் இந்தியாவை கண்டிக்கும் துருக்கி, ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் போராளி குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற நிலையில், இதில் பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகள் ஈடுபட்டதும் முன்னாள் பாரா கமாண்டோ ஒருவரே வழி நடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதை இந்தியா உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் முக்கிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி தாக்குதல்களையும் , ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.இதனை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்த நிலையில் பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்திற்கு முன்பாகவே துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீரை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி. தற்போது அதன் கூட்டாளி நாடான துருக்கியையும் கடுமையாக விமர்சித்ததோடு அது இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்திய மண்ணில் பயங்கரவாதத்தை அரங்கேற்றிய தீவிரவாதிகளை வேட்டையாட இந்தியாவுக்கு உரிமை இல்லை எனக் கூறும் துருக்கி எதற்காக சிரியாவின் குர்து பிரிவுகள் ஈராக் மற்றும் பிகேகே போராளி குழுக்களை பயங்கரவாதிகள் என அறிவித்து அவர்களை தாக்குகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள ஓவைசி," துருக்கி, தனது மண்ணில் பயங்கரவாத குழுக்களை (குர்து குழுக்கள்) கடுமையாக அடக்குகிறது. குறிப்பாக சிரியா, ஈராக் ஆகிய இடங்களில் குர்து பயங்கரவாத குழுக்களைத் துருக்கி தாக்குகிறது. துருக்கி, தனது மண்ணில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடாக இருக்கிறது. சிரியா, ஈராக், குர்து பயங்கரவாதிகளை எவ்வித தயக்கமின்றி தாக்குகிறது. ஆனால், பாகிஸ்தானை உலகளவில் பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கும் இந்தியாவை எப்படி விமர்சிக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
जब तुर्की खुद कुर्दों पर हमले करता है, तो वह भारत पर कैसे सवाल उठा सकता है?pic.twitter.com/1HryO6vanI
— Asaduddin Owaisi (@asadowaisi) May 8, 2025
ஓவைசியின் இந்த பேச்சு இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற வைத்திருக்கிறது. தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் போது துருக்கி பயங்கரவாதிகளை தாக்க அனுமதிக்கும் நிலையில், இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அதனை எதிர்க்கிறது. துருக்கியின் இந்த இரட்டை நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்க முக்கியமான காரணமாக இருந்தாலும், இந்த விமர்சனம் அதனை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications