உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுங்கள்.. ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீனை உச்சநீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி வழங்கி உத்தரவிட்டது. அதில் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். வெளிநாடு செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை. இந்த நிலையில் ப. சிதம்பரத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருக்கும் ப சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் ப. சிதம்பரம். எனினும் அமலாக்கத் துறையோ மேலும் ஒரு நாள் சிதம்பரத்தை தங்கள் கஸ்டடியில் வைக்க கோரியுள்ளது.