ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தமக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீடு பெற்றது. இந்த அனுமதிக்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு.
இவ்வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்கவும் முன்ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்தை கைது செய்ய அடுத்தடுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
இந்நிலையில் இன்று ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.
தமது மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து ப. சிதம்பரத்தின் மனு மீது நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.