கருப்பு சட்டையை விமர்சித்த மோடி.. "தந்தை பெரியார்" தெரியுமா? சரமாரியாக பதிலடி தந்த ப. சிதம்பரம்
டெல்லி: கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
"தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்" என்று பிரதமரின் கருத்துக்கு சிதம்பரம் பதில் கருத்து கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கருப்பு உடை அணிந்து வந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில், தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் இது குறித்து மத்திய அரசு விவாதத்தை நடத்த முன்வரவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளியையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் 4 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தன. இதன் விளைவாக, சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், "சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, சூனிய மந்திரத்தைப் பயன்படுத்தினர். ஆனால் அது எடுபடவில்லை. தங்கள் விரக்தியைப் போக்கிக் கொள்ள அவர்கள் கருப்புச் சட்டை அணிந்தனர். ஆனால் பில்லி, சூனியம், மூடநம்பிக்கைகளால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பில்லி, சூனியத்தால் மோசமான நாட்களுக்கு முடிவு கட்ட முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "பிரதமர் அவர்களே, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பை சிதைக்கும் வேலையை நிறுத்துங்கள். நாட்டை தவறாக வழிநடத்தாதீர்கள். பிரச்சினைக்குரிய விஷயங்களில் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என ராகுல் காந்தி, பிரதமரின் ட்வீட்டுக்கு பதில் ட்வீட்டில் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "கருப்புப் பணத்தைக் கொண்டுவர அவர்களுக்கு வழியில்லை. அதனால் கருப்பு ஆடைகளை வைத்து சர்ச்சை செய்கின்றனர்" என பிரதமரை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ப.சிதம்பரம் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்" என குறிப்பிட்டுள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications