கிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி
டெல்லி: கிர்கிஸ்தான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியாக செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்சிஓ) வரும் 13 மற்றும் 14ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செல்லும் விமானம், பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டுமென அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்தினால் 4 மணி நேரம் மட்டுமே செலவாகும். மாற்று வழித்தடத்தில் சென்றால் 8 மணி நேரம் விரயமாகும். எனவே நேர விரயத்தைத் தவிர்க்க, பாகிஸ்தான் வான்பரப்பில் மோடியின் விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
வான்வழி தாக்குதல்
கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெயிஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
தடை விதிப்பு
இதைத்தொடர்ந்து, இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை பாகிஸ்தான் இதுவரை விலக்கிக் கொள்ளாததால், பிரதமர் மோடியின் விமானத்திற்கு சிறப்பு அனுமதி கோரப்பட்டுள்ளது. மொத்தம் 11 வழித்தடங்களில் தெற்கு பாகிஸ்தானில் உள்ள 2 வழிகளில் மட்டுமே தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 9 வழித்தடங்களில் இன்னும் தடை நீடிக்கிறது.
சிறப்பு அனுமதி வழங்கியது
ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் விமானம் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அந்நாட்டு அரசு சிறப்பு அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த முடியாததால் இண்டிகோ விமானம் டெல்லி - இஸ்தான்புல் (துருக்கி) நேரடி விமானத்தை ரத்து செய்துள்ளது. இதேபோல டெல்லி - அமெரிக்காவுக்கு இடைநில்லாமல் இயக்கப்படும் ஏர்இந்தியா விமானமும் முடங்கி உள்ளது.
பிரதமர் அலுவலகம் தகவல்
இதற்கிடையே, ஜி-7 நாடுகளின் 45-வது உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஜ் நகரில் வரும் ஆக .24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.