ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் சரமாரி வான்வழித் தாக்குதல்-15 பேர் பலி-தலிபான்கள் எந்த நேரத்திலும் பதிலடி
டெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். இந்த தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் திடீரென நேற்று நள்ளிரவு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

பக்திகா மாகாணத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் 7 இடங்களில்
பாகிஸ்தானின் விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த வான்வழித் தாக்குதலில் பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் என்ற பகுதியே முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலைக் கண்டித்து ஆப்கானை ஆளும் தலிபான்களின் பாதுகாப்பு அமைச்சகம், இத்தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என எச்சரித்துள்ளது. வஜிரிஸ்தானி அகதிகளை இலக்கு வைத்துதான் பாகிஸ்தான் தாக்குத்அல் நடத்தி இருக்கிறது; வஜிரிஸ்தான் அகதிகள் இறைமையுடன் சுய உரிமையுடன் தங்கள் நிலத்தில் வாழ உரிமை கொண்டவர்கள் என்றும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்மைகாலங்களில் பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தருகிறது என்பதுதான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இந்த தலிபான்கள் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications