ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடரும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு- ராணுவம் கடும் பதிலடி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஆத்திரமூட்டும் வகையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் நேற்றும் 8 எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி தந்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் படுகொலைத் தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதால் இந்தியா கடும் கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதித்தது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் ராணுவம் நடத்துகிறது. இதற்கு நமது ராணுவமும் தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார், நவ்ஷாரா, சுந்தெர்பானி மற்றும் அக்னூர் ஆகிய எல்லைப் பகுதிகளில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஆத்திரமூட்டியது. இதற்கு நமது ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications