பாகிஸ்தான் ட்ரோன்களால் எல்லையை கூட நெருங்க முடியவில்லை.. அனைத்தையும் அழித்துவிட்டோம்- இந்திய ராணுவம்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவிய மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களை எல்லைக்கு வெகு தொலைவிலேயே அழித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில காலமாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்தது. இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும் அதை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யத் தூது விட்டது. அதை இந்தியாவும் ஏற்கனவே மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் குறித்துப் பாதுகாப்புப் படையினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

ஏ.கே.பாரதி
இந்தச் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டது பரிதாபம் என்று குறிப்பிட்ட ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுத்தது என்றும் உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது என்றும் தெரிவித்தார். வலிமையான வான் பாதுகாப்பை உருவாக்கியதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை ஏவியது என்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் அதை முறியடித்தோம் என்றும் தெரிவித்தார். எங்கள் அனைத்து ராணுவத் தளங்களும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளன என்று கூறிய அவர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மிஷன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும் தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால மிஷன்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அழிப்பு
முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்ததால் எந்தவொரு ட்ரோன்களும் எல்லைக்கு அருகே கூட வரவில்லை என வைஸ் அட்மிரல் பிரமோத் தெரிவித்தார். எதிரியைப் பல நூறு கிலோமீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு படை அமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் ஏகே பாரதி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பாகிஸ்தானின் ராணுவத் தாக்குதல்களை முறியடித்தது. எங்கள் போராட்டம் என்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது மட்டுமே.. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஆதரித்தது. மோதலை பெரிதாக்கியது.
பாதுகாப்பாக இருக்கிறது
இந்தியாவின் அனைத்து ராணுவத் தளங்களும் அமைப்புகளும் பாதுகாப்பாக இருக்கிறது. தொடர்ந்து முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.. தேவை ஏற்பட்டால் எந்தப் பணியையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளன. பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியது. இதன் காரணமாகவே பதிலடி கொடுக்க நேர்ந்தது" என்றார்.
கிரானா ஹில்ஸ்
மேலும், பாகிஸ்தான் அணுஆயுதங்களை வைத்திருக்கும் கிரானா ஹில்ஸ் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது... கிரானா ஹில்ஸ் பகுதியில் என்ன இருக்கிறது என தெரியாது. ஆனால், அங்கு தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை ஏகே பாரதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை அனுப்பியதாகவும் அவை அனைத்தும் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை அனுப்பினாலும் அதை வீழ்த்தும் சக்தி இந்தியப் பாதுகாப்புப் படைக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications