5வது நாளாக முடங்கிய லோக்சபா - ராஜ்யசபா.. எதிர்க்கட்சிகள் கடும் அமளி - கோஷம்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முறையை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இன்று 5வது நாள் கூட்டத்திலும் அதுபற்றி விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்திய நிலையில் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் கமல்ஹாசன் உள்பட தமிழகத்தில் இருந்து தேர்வான புதிய 4 எம்பிக்கள் பதவியேற்பை தொடர்ந்து வரும் 28 ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இருசபைகளும் முடங்கி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகளின் அமளி தான்.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு வருகின்றனர். இது இருசபைகளின் நடவடிக்கைகளை பாதிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் திருத்த பட்டியல் தான். வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் பீகாரில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி அங்கு நடந்து வருகிறது. மொத்தம் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபாவில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைவர் ஹரிவன்ஸ் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் அமளி செய்தனர். இதையடுத்து இருசபைகளும் முடங்கியது.
இந்நிலையில், தான் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா ஆகியவை தொடங்கின. லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ராஜ்யசபா சார்பில் அகிலேஷ் பிரசாத் சிங், ரன்ஜித் ரஞ்சன் ஆகியோர் பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் திருத்த பட்டியல் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதையடுத்து லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் திருத்த பட்டியல் திருத்தம் பற்றி விவாதிக்க கோரினார். ஓம்பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் ராஜ்யசபாவை எடுத்து கொண்டால் தமிழகத்தில் இருந்து புதிய எம்பிக்களாக தேர்வான மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், திமுகவின் பி. வில்சன் (2வது முறையாக தேர்வு), கவிஞர் சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் இன்று எம்பிக்களாக பொறுப்பேற்றனர். அதன்பிறகு பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல ்திருத்தம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து சபை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் வரும் 28 ம் தேதி காலை 11 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் 5வது நாளாக எதிர்க்கட்சியினரால் ராஜ்யசபா மொத்தமாக முடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வாகி உள்ள அதிமுகவில் சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்னும் பதவியேற்கவில்லை. இவர்கள் வரும் 28 ம் தேதி பதவியேற்க உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications