எதிர்க்கட்சிகள் வெயிட்டிங்- வருது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! டிச.2-ல் அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவரும் சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ந் தேதி கூடுகிறது. இதனை ஒட்டி டிசம்பர் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றை கூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் செப்டம்பர் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதனால் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுந்தது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது இந்த மசோதா. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னரே இது அமலுக்கு வரும் என்பதால் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2-ந் தேதி அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications