நாடாளுமன்றத்தில் டிச. 13 முதல் அரசியல் சாசனம் குறித்த விவாதம்-மத்திய அரசு- எதிர்க்கட்சிகள் ஒப்புதல்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை இந்திய அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடத்த மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் நாள்தோறும் முடக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் இன்றும் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கினர். இதனால் இரு சபைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்காக இணக்கம் உருவானது.
லோக்சபாவில் டிசம்பர் 13 மற்றும் டிசம்ப 14 ஆகிய நாட்களில் அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடைபெறும். டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய நாட்களில் ராஜ்யசபாவில் இந்த விவாதம் நடைபெறும்.
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதால் அந்த மசோதா தற்போதைய கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை. லோக்சபா, ராஜ்யசபாவில் சிறிது நேரம் மட்டும் கடும் அமளிக்கு இடையே சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications