ஓமிக்ரான்.. குன்னூர் விபத்து.. மசோதாக்கள்.. இன்று நாடாளுமன்றத்தில் என்ன விவாதிக்கப்படும்?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று இரண்டு அவைகளிலும் முக்கியமான பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிப்பது குறித்தும் இன்று விவாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அவை பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் நாளே விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான விவாதம் செய்யாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அதேபோல் எதிர்க்கட்சி எம்பிக்கள் 12 பேர் ராஜ்ய சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தன. அதேபோல் ஓமிக்ரான் கொரோனா குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவையில் அமளி நீடித்து வரும் நிலையில் நேற்று அவையில் இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்த 12 பேரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அவையில் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
மக்களவை:
இந்த நிலையில் இன்று மக்களவையில் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்ட திருத்தம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மசோதா ஏற்கனேவே குடியரசுத் தலைவர் மூலம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதன்படி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களுக்கு 2 வருடம் பணிக்காலம் + 3 வருடம் கூடுதலாக பதவி நீட்டிப்பு என்று விதி கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டாலும் சம்பிரதாயப்படி இன்று அவையில் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று தீர்மானம் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.
மாநிலங்களவை:
மாநிலங்களவையில் இன்று மசோதா எதுவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மாறாக பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படும். மக்கள் தொகை கட்டுப்பாடு, குடும்ப கட்டுப்பாடு தொடர்பான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications