நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. வக்பு வாரிய திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இன்று நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி உள்ள இந்த கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நேற்று முன் தினம் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு 12 லட்சமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அமர்வுகள் தொடங்குகின்றன.
நாடாளுமன்றத்தில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
சிறுபான்மையினர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில்தன் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா
வக்பு வாரிய திருத்த மசோதா கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்க்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு அமைக்கப்பட்டு மசோதா மீது ஆய்வு நடைபெற்றது.
மசோதா தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரையை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்தது. பாஜக கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த கூட்டுக்குழு அறிக்கைதான் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications