மாஸ்க், கையுறை என கொரோனா கிட் கொடுத்து பயணிகளை வரவேற்ற டெல்லி போலீஸ்
டெல்லி விமான நிலையத்தில் கொரோனா கிட் கொடுத்து பயணிகளை வரவேற்ற போலீஸ்
டெல்லி: பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா காரணமாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், மற்ற நாடுகளுடனான விமானப் போக்குவரத்து வழக்கம் போலவே இருக்கிறது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு கிட்டையும், பூங்கொத்துகளையும் கொடுத்து டெல்லி போலீசார் வரவேற்றனர்.
கொரோனா பரவல் காரணமாக விமான நிலையங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை உற்சாகப்படுத்த இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், "வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் பூங்கொத்துடன் மாஸ்க், கையுறைகள், சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா கிட்டை வழங்கி வரவேற்கிறோம். அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நினைவூட்டும் பேட்ஜும் உள்ளது.
புது கட்டுப்பாடுகள்... வாகன சோதனைகள்... ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவை முடித்துக் கொண்ட பிரிட்டன்
இந்த முயற்சி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியது. மேலும், புத்தாண்டு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாரின் மன உறுதியையும் அதிகரிக்கும் வகையில் இது இருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதன் நன்மைகள் குறித்து விளக்கவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மேலும், காவலர்கள் இது குறித்து பயணிகளுக்கு விளக்கினர்.
கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கார்களை முன்பதிவு செய்வது போன்றவற்றிலும் காவல் துறையினர் பயணிகளுக்கு உதவினார்கள்" என்றார்.