பணம் + ரேஷன் இலவசமாக கிடைப்பதால் மக்கள் வேலை செய்வது இல்லை.. இலவசத்தை விளாசிய உச்சநீதிமன்றம்
டெல்லி: தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றனர். இதனால் இலவச ரேஷன் மற்றும் பணத்தை பெற்று கொண்டு பொதுமக்கள் வேலை செய்ய விரும்புவது இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தலின்போது கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

எப்படியாவது மக்களிடம் இருந்து ஓட்டுகளை பெற்று வெற்றி பெற என்ற எண்ணத்தில் அரசியல் கட்சிகள் இத்தகைய வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இப்போது தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000, ரூ.2,500 என்று வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரேஷனில் இலவச பொருட்களும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலின்போதும் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் இலவசங்களால் பொதுமக்கள் வேலை செய்வது இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது நகர்புறங்களில் வீடு இன்றி வாழ்பவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிஆர் கவாய், ‛‛இலவசங்கள் துரதிர்ஷ்டவசமானது. இந்த இலவசங்களால் மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களுக்கு இலவசமாக ரேஷன் கிடைக்கிறது. வேலை செய்யாமலேயே பணமும் கிடைக்கிறது. அவர்கள் (வீடு இல்லாதவர்கள்) மீதான உங்களின் அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அவர்களை இந்த சமூகத்தின் நீரோட்டத்தின் ஒருபகுதியாக மாற்ற வேண்டும். நா்டடின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி இருந்தார். அவர் கூறும்போது, ‛‛நகர்ப்புறத்தில் வீடு இன்றி வாழ்வோருக்கு வாழ்விடம் வழங்குவது உள்பட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த பணி முடியும்போது திட்டம் என்பது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்'' என்றார்.
இதை கேட்ட உச்சநீதிமன்றம், ‛‛வறுமை ஒழிப்பு திட்ட பணியை மத்திய அரசு எப்போது நடைமுறைக்கு கொண்டு வரும்?'' என்பதை கேட்டு தகவல் கொடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதை உச்சநீதிமன்றம் விமர்சிப்பது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பும் பலமுறை உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனாலும் அரசியல் கட்சிகள் அதனை கண்டுகொள்வது இல்லை. மக்களை முன்னேற்றும் வகையில் இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications