ஜல்லிக்கட்டு சட்டத்தை உறுதி செய்த தீர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் பீட்டா திடீர் சீராய்வு மனு தாக்கல்!
டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா திடீரென சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு அனுமதி கோரி 2017-ம் ஆண்டு சென்னை மெரினாவில் மாணவர்கள் தொடங்கிய புரட்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்தது. அன்று மெரினா முதல் தமிழ்நாட்டு குக்கிராமம் வரை தமிழர் நிலத்தின் மொத்த கோபத்துக்கும் உள்ளானது பீட்டாதான். பீட்டா அமைப்புக்கு எதிராகத்தான் மெரினா புரட்சி எனும் தமிழர் புரட்சியின் மைய முழக்கமே இருந்தது.

இப்புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஒப்புதலுடன் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும் வெறி அடங்காத பீட்டா, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது; சித்ரவதை செய்யப்படுகிறது; 5 ஆண்டுகாலம் ஆய்வு செய்து தரவுகளைத் தருகிறோம் என்றெல்லாம் கூறியது.
இவ்வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு நிகழ்வுகள நடத்தும் சட்டத்துக்கு ஜனாதிபதியே ஒப்புதல் தந்துவிட்டார்; அந்த சட்டமும் அரசியல் சாசனத்துக்குட்பட்டதுதான். அதில் தலையிட முடியாது. தமிழ்நாடு அரசின் சட்டம் முழுமையாக அமல்படுத்தியாக வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பின் மூலம் தமிழர் புரட்சி முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டது.
ஆனாலும் பீட்டா அமைப்பு இப்போதும் தமிழருக்கு விரோதமாக நடந்து கொள்கிறது. உச்சநீதிமன்றம் மே மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதாவது அந்த தீர்ப்பை மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications