செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதில் முழு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பாலாஜி சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதாவது, கடந்த 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், ஜாமீனில் வெளி வந்த பிறகு மீண்டும் மின் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதனால், ஜாமீன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி பாலாஜி சீனிவாசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications