வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி! ஒரு வாரத்தில்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
டெல்லி: மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை அடுத்த மாதம் மே 5-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசின் வக்பு சட்டத்துக்ககு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், தவெக, முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 73 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இன்று வரை வக்பு சட்டத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, வக்பு சட்டத்துக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 6 ரிட் மனுக்களை மட்டுமே விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு, வக்பு வாரியம் உள்ளிட்டவை ஒருவாரத்துக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
அத்துடன், வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. வக்பு சட்டத்தின் படி புதிய நியமனங்கள் மேற்கொள்லவும் உச்சநீதிமன்றத்தின் இந்த தடை பொருந்தும். வக்பு தொடர்பான சொத்து விவகாரங்களில் தற்போதைய நிலை எதுவோ அதுவே அடுத்த ஒரு வாரத்துக்கும் தொடர வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. புதிய வக்பு சட்டத்தின்படி, வக்பு சொத்துகளை அங்கீகரித்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் ஒரு வார காலத்துக்கு மேற்கொள்ள முடியாது.
உச்சநீதிமன்றத்தில் கெஞ்சிய மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டுகிறது என்றும் வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு வார கால அவகாசமாவது கட்டாயம் தர வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வக்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் தடை செய்வது அரிதான ஒரு முடிவாகும்; வக்பு சட்டத்தின் கடந்த காலம், பல்வேறு நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தர்ப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
உச்சநீதிமன்ற தடை- காங்கிரஸ் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் வக்பு சட்டத்துக்கான இடைக்கால தடையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமார வரவேற்கிறது.
மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து வரும் சூழ்நிலையில் தங்கள் அதிகார மமதையால் இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் ஒற்றை நோக்கத்தோடு வக்பு திருத்த சட்ட மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது அதற்கு உடனே குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
"பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே சமூக நீதி" என்பதை கொள்கை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம் இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்த போதிலும் ஜனநாயகத்தின் வழியில் முதல் நபராக வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்தனர்.
இன்று வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
புதிய வக்பு திருத்த சட்ட மசோதா அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்றும் வக்பு சொத்துக்களை புதிய நடைமுறைப்படி வரையறுக்க கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய ஜனநாயக நாட்டில் எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரிகள் வந்தாலும் இறுதியாக ஜனநாயகமே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார வரவேற்கிறோம். இவ்வாறு செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications