பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு... இந்த 'இரு' விஷயங்கள் தான் காரணம்... மத்திய அமைச்சரின் புது விளக்கம்
டெல்லி: ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்ததும் கொரோனா பரவலுமே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு காரணங்கள்
பெட்ரோல் மற்றும் டீடல் விலையைக் குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "எரிபொருள் விலையேற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் விலை.

ஒபெக் நாடுகள்
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள், அதன் உற்பத்தியை வெகுவாக குறைத்துவிட்டன. இதன் காரணமாகவே எரிபொருள் விலை உயர்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதை ஒபெக் நாடுகளுக்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.இனி இந்த நிலை மாறும் என்று நம்புகிறோம்" என்றார்.

கொரோனா பரவல்
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு மற்றொரு காரணம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "கொரோனா ஒரு காரணம். பல்வேறு வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி வசூலிக்கின்றன. இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் தான் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும்.

வரி தேவைப்படுகிறது
இதற்காக அரசு தனது முதலீட்டை அதிகரித்துள்ளது, இந்த பட்ஜெட்டில் 34 சதவீதம் வரை செலவுகள் அதிகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநில அரசுகளும் செலவுகளை அதிகரிக்க உள்ளன. இதனால்தான் எங்களுக்கு இந்த வரி தேவைப்படுகிறது, ஆனால், அதேநேரம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவதில்லை என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். மத்திய நிதியமைச்சரும் மாநில அரசுகளும் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications