பிஎஃப்ஐ "ஹிட் லிஸ்ட்.!" கேரள ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு.. Y பிரிவு கமாண்டோ பாதுகாப்பு! அதிரடி ஆக்ஷன்
டெல்லி: கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குத் தொடர்புடைய பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆபரேஷன் ஆக்டோபஸ் என்ற மெகா திட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 106 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

5 ஆண்டு தடை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ஐஎஸ் பயங்கரவாதிகள் உடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த ரெய்டிற்கு பின்னர், மத்திய அரசு அந்த அமைப்பை 5 ஆண்டுகளுக்கு நாட்டில் தடை செய்தது.

கேரளா
இதற்கிடையே நாட்டில் உள்ள பல முக்கிய தலைவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறி வைத்து இருந்ததாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தம் 5 முக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்களைத் தாக்க பிஎஃப்ஐ அமைப்பு திட்டமிட்டிருந்ததாக உளவுத் துறை நிறுவனங்கள் மத்திய அரசை எச்சரித்து இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தச் சூழலில் அந்த 5 ஐந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும் மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி உள்ளது. உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. Y பிரிவில் 11 பேரைக் கொண்ட டீம் தலைவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பார்கள். இந்த டீமில் ஒன்று அல்லது இரண்டு NSG கமாண்டோக்களும் இருப்பார்கள். நமது நாட்டில் பெரும்பாலான விஐபிக்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு தான் வழங்கப்படுகிறது.

லிஸ்ட்
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மீட்கப்பட்ட ஆவணங்களில் ஐந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களை இஸ்லாமிய அமைப்பு குறி வைத்து இருந்தது தெரிய வந்தது. அதாவது கேரள பிஎஃப்ஐ உறுப்பினர் முகமது பஷீர் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் தான் இந்த 5 ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "பிஎஃப்ஐ அமைப்பு பயங்கரவாதம், அதற்கு நிதியளித்தல், கொடூரமான கொலைகள், இந்திய அரசியலமைப்பைப் புறக்கணித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மைக்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுவதால் பிஎஃப்ஐ அமைப்பு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்கிறோம்" என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications