"இந்தியா" பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.. பொதுநல வழக்கு! டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவு
டெல்லி: எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், இந்த பெயருக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுக்க இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட வேண்டும் என்றும் அப்போது தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று பல எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது. ஆம் ஆத்மி, திரிணாமுல் எனக் காங்கிரஸுடன் தொடர்ந்து மோதல் போக்கில் இருந்த பல கட்சிகள் இதில் இணைந்தன.
இந்தியா கூட்டணி: மொத்தம் 26 கட்சிகளைக் கொண்ட இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயர் வைக்கப்படுவதாகக் கடந்த மாதம் நடந்த பெங்களூர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே "இந்தியா" கூட்டணியின் பெயருக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"இந்தியா" என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்பது வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், கூட்டணியில் இருக்கும் 26 அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கு: எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை கிரிஷ் பரத்வாஜ் என்பவர் தொடர்ந்து இருந்தார்.
பரத்வாஜ் தனது மனுவில் அனைத்து எதிர்க் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் இந்தியாவின் பெயரைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் இது வரும் 2024 தேர்தலைப் பாதிக்கலாம் என்று அவரது வழக்கில் கூறப்பட்டிருந்தது. மேலும், இதனால் தேவையற்ற வன்முறை ஏற்பட்டு நாட்டின் சட்டம் ஒழுங்கையும் பாதிக்கக்கூடும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
என்ன சட்டம்: 1950இல் கொண்டு வரப்பட்ட முறையற்ற சின்னங்கள் மற்றும் பெயர்கள் பயன்பாடு சட்டத்தின் கீழ் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுகளையும் அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் தங்கள் கூட்டணியின் பெயரைத் தேசத்தின் பெயராக முன்வைப்பதாகவும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தியாவுக்கே எதிராக உள்ளனர் என்பது போன்ற ஒரு பிம்பத்தை இவர்கள் உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறியிருந்தார். வரும் தேர்தல் என்டிஏ கூட்டணிக்கும் நாட்டிற்கும் (இந்தியா) இடையே நடக்கும் தேர்தல் என்று ராகுல் காந்தி கூறியதை மேற்கோள்காட்டி இது சாமானிய மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் பதிலளிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் மற்றும் 26 கட்சிகள் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications