கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி.. மிக மோசமான நிலையில் பாஜக... ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: கேரளாவில் இடதுசாரிகள் 77-85 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
140 இடங்களைக் கொண்ட கேரளாவில் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதுதவிர பாஜகவும் மூன்றாவது அணியாகக் கேரளாவில் களமிறங்குகிறது. சபரிமலை போராட்டத்தின்போது கிடைத்த ஆதரவை அக்கட்சி இந்தத் தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி
இந்நிலையில் இந்தத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி 42.9% வாக்குகளுடன் 77-85 இடங்களில் வெல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 11 இடங்கள் குறைவாகும்

காங்கிரஸ் நிலை என்ன
அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி 37.9% வாக்குகளுடன் 54 முதல் 62 இடங்களில் வெல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை பெற்ற 47 இடங்களை விட அதிகம் என்றாலும்கூட இடதுசாரிகள் அரசை தோற்கடிக்கத் தேவையான இடங்களில் காங்கிரஸ் கூட்டணியால் வெல்ல முடியவில்லை.

மிக மோசமான நிலையில் பாஜக
கேரளாவில் மூன்றாவது அணியாக உருவெடுக்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. இதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனையும் பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது. இருந்தாலும்கூட பாஜக இந்த முறை கேரளாவில் 0 - 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர பிரசாரம்
கேரளாவில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கிட்டதட்ட அனைத்துக் கட்சிகளும் அறிவித்துவிட்டன. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தர்மடம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவையும் அவர் நேற்று தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் அங்குள்ள தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications