பியூஷ் கோயலிடம் நிதித்துறை கூடுதலாக ஒப்படைப்பு.. ஜெட்லிக்குப் பதில் பட்ஜெட் தாக்கல் செய்வார்!
டெல்லி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிதித்துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர் வரும் வரை நிதித்துறையை பியூஷ் கோயல் பார்த்துக் கொள்வார். கோயலே, இந்த ஆண்டு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளார்.
66 வயதாகும் அருண் ஜேட்லிக்கு உடல் நிலை சரியில்லை. அவருக்கு தோல் புற்றுநோய் வந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றுள்ள ஜேட்லி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 2 வாரம் அவர் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நிதித்துறை பொறுப்பு ரயில்வே அமைச்சர் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரே பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. அந்த பட்ஜெட்டை கோயல் தாக்கல் செய்வார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, அருண் ஜேட்லி வகித்து வந்த துறைகள், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.