பிரதமர் வேட்பாளர்- 'சீந்துவாரற்ற' நிதிஷ்- "இந்தியா" கூட்டணிக்கு கூண்டோடு குட்பை சொல்லும் பீகார் கேங்
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை யாருமே முன்மொழியாததால் கூட்டணியில் இருந்து பீகார் மாநிலத்தில் ஜேடியூ, ஆர்ஜேடி கட்சிகள் வெளியேறக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்.
"இந்தியா" கூட்டணிக்கு அச்சாரம் போட்டது பீகார் மாநிலம்தான். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமாரின் ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. இதே பார்முலாவை பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் முன்னெடுக்கலாம் என்ற விதை இங்குதான் முளைத்தது.

நிதிஷ்குமார், தேஜஸ்வி: இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆர்ஜேடியின் தலைவரான துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக போய், "இந்தியா" கூட்டணி உருவாக ஆதரவைத் திரட்டினர். பின்னர் பீகார் மாநிலம் பாட்னாவில் "இந்தியா" கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பாட்னாவை தொடர்ந்தே பெங்களூர், மும்பை தற்போது டெல்லி என "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
நிதிஷ் பிரதமர் வேட்பாளர்: "இந்தியா" கூட்டணியை தமது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்; இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வேண்டும். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக - கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நிதிஷ்குமாரின் பெருங்கனவு. இதனை பகிரங்கமாகவே ஜேடியூ தலைவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு பக்க வாத்தியம் வாசித்து வந்தது லாலு பிரசாத் யாதவும் அவரது ஆர்ஜேடி கட்சியும். ஆனால் இதனை "இந்தியா" கூட்டணி கட்சிகள் ரசிக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு: டெல்லியில் நேற்று நடைபெற்ற "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்மொழிந்தார். ஒரு தலித் பிரதமர் வேட்பாளர் என்ற கோஷத்துக்காக மமதா, கார்கேவை முன்மொழிந்தார். இதனை ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜூன கார்கே இதனை ஏற்க மறுத்தார். மல்லிகார்ஜூன கார்கே என்னதான் நிராகரித்தாலும் அவரையே பெரும்பாலான "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஏற்க தயாராக இருந்தன; எதிர்க்கவில்லை என்பதையே இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தெரிவித்தார்.
கடுப்பான நிதிஷ், லாலு: ஆனால் மல்லிகார்ஜூன கார்கே பரிந்துரைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்ட உடனேயே "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முதல் ஆளாக வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் வெளியேறினார். இந்த இருவருமே செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. நிதிஷ்குமாரை ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணியும் ஓரம் கட்டி புறக்கணிப்பதை லாலு விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் இந்தியா கூட்டணியில் இருந்தே பீகாரை சேர்ந்த ஜேடியூ, ஆர்ஜேடி கட்சிகள் கூண்டோடு விலகும் சாத்தியங்கள் இருக்கின்றன; இது "இந்தியா" கூட்டணிக்கு பீகாரில் பெரும் பின்னடைவைத் தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications