லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறதா? மீண்டும் மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுன் காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மீண்டும் உரையாற்ற உள்ளார்.
நமது நாட்டிலும் கொரோனா பரவ தொடங்கிய நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஒருநாள் மட்டும் மக்களே சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். இதனைத் தொடர்ந்தும் கொரோனா தீவிரமாக இருந்தது. இதனால் 21 நாட்கள் நாட்டு மக்கள் லாக்டவுனை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனடிப்படையில் கடந்த 3 வாரங்களாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் வரும் ஏப்ரல் 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் லாக்டவுன் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பதை பிரதமர் மோடி சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்புக்கு பரிந்துரைத்துள்ளன.
ஒடிஷாவில் லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் லாக்டவுனை மத்திய அரசு நீட்டிக்கவே வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications