பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா?
டெல்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் ஒரு வருட ஆட்சி முடிந்ததும் பிரதமர் மோடி அமைச்சர்கள், கட்சி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அமைச்சர்களின் செயல்பாடுகள், கட்சி முடிவுகள், அடுத்த ஒரு வருடம் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்வது வழக்கம்.
அதன்படி இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், நிர்வாகம் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் எப்படி செயல்பட்டனர், யாரெல்லாம் சரியில்லை என்று ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இதில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல் முக்கியமான திட்டம் ஒன்றை பற்றிய அறிவிப்பை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம், இது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து உள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் உட்பட பல்வேறு மாவட்ட சட்டசபை தேர்தல் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை, வேக்சின் கொள்கை விமர்சனங்களை சந்தித்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடியின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. நேற்றே இதேபோன்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நாடடைந்தது. நேற்று 4 மணி நேரம் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்தது.
முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அமைச்சரவையில் 79 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது 12+ அமைச்சர்கள் இடம் வரை காலியாக இருக்கிறது. இதனால் இந்த அமைச்சரவை பொறுப்புகளை நிரப்பும் வகையிலும், மற்ற அமைச்சரவை மாற்றம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.