அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. சுகாதார துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
டெல்லி: அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகமிக அதிக எண்ணிக்கையில் தொற்று தினமும் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக இந்தியாவில் உயர்ந்து உள்ளது என்று சுகாதார அமைச்சின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. உயிரிழப்பும் தினமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோவால் இதுவரை 8,928 பேர் உயிரிழந்துள்ளனர். 1,46,880 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சரியான திட்டம்.. கொரோனாவை ''லெப்ட் ஹேண்டில்'' கையாண்ட பெங்களூர்.. சென்னை கற்க வேண்டிய பாடம்!
அதிகாரிகளுடன் மோடி ஆய்வு
இந்நிலையில் கோவிட் -19 என்ற கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வரும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலைமை குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விவாதித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நகரங்களில் அதிகம்
இந்த கூட்டத்தில் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினரும் மருத்துவ அவசரநிலை மேலாண்மை திட்டத்தின் கன்வீனருமான வினோத் பால் கொரோனா பாதிப்பு குறித்து விவரித்துள்ளார். மூன்றில் இரண்டு பங்கு ஐந்து மாநிலங்களில் உள்ளது எனறும் பெரிய நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இருப்பதையும் விவரித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
அப்போது, நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் தேவைகள் குறித்து அரசின் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொண்டார், மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதரத்துறையுடன் கலந்தாலோசித்து அவசரகால திட்டங்களை செய்யுமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மோடி புதிய பரிந்துரை
பருவமழை நெருங்கி வருவதால் முறையான தயாரிப்பை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சகத்தை பிரதமர் மோடி கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். டெல்லியில் கொரோனா பரவும் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் இரண்டு மாதங்களுக்கான கணிப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷத மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து மூத்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.