விவாதத்திற்கு வர சொன்னால்.. மவுன விரதம் இருக்க சென்றுவிட்டார் மோடி.. வீடியோ வெளியிட்டு ராகுல் தாக்கு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதில் அவர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். தன்னுடன் விவாதம் நடத்தாமல் மோடி மவுன விரதம் இருக்கச் சென்றதாக விமர்சித்த ராகுல் காந்தி, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், நாளை கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

அதில் பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல்: கடைசிக் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் நரேந்திர மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நாட்டுக்கான புதிய வளர்ச்சி பார்வையைக் காங்கிரஸ் மக்கள் முன் வைத்ததாகவும் இந்தியா கூட்டணியே அடுத்த அரசை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், "பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தைத் திசை திருப்பப் பல முறை முயன்றார். இருப்பினும், அதையும் தாண்டி மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேசியுள்ளோம். விவசாயிகள் பிரச்சினை, தொழிலாளர்கள் பிரச்சினை, இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் குரலை நாங்கள் எழுப்பினோம்.
தலைவணங்குகிறேன்: நாட்டின் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.. அடுத்து இந்தியா கூட்டணி அரசு தான் அமையப் போகிறது என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் நான் நம்பிக்கையுடன் கூறுவேன்.
விவாதம்: எனக்கும் பிரதமருக்கும் இடையே ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்று பலரும் அழைப்பு விடுத்தனர்.. ஆனால் விவாதம் நடத்தப் பிரதமர் மோடி தயாராக இல்லை. இப்போது விவாதம் நடத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் அவர் விவாதம் நடத்துவதற்குப் பதிலாக மவுன விரதம் இருக்கச் சென்றுவிட்டார்" என்று அதில் கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரசு அமைப்புகளைக் காக்க தங்களுடன் துணை நின்ற எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை மாற்றும் புரட்சிகரமான உத்தரவாதங்களை நாங்கள் முன்வைத்தோம்.. நாட்டின் வளர்ச்சியை மொத்தமாக மாற்றக் கூடிய இந்த உத்தரவாதங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் முன்வைத்தோம்" என்றார்.
கண்காணிக்க வேண்டும்: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் தான் முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்த அவர், நாட்டுக்கான புதிய பார்வையை மக்கள் முன் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கடைசி நேரம் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications