டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு.. 10க்கும் மேற்பட்டோர் பலி! பிரதமர் இரங்கல்
டெல்லி: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் காலிம்போங் மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளம், பாலம் இடிந்து விழுந்த விபத்து காரணங்களால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிரிக்-சுகியாபோக்ரி சாலைக்கு அருகே ஏற்பட்ட பெரிய நிலச்சரிவு வீடுகளை அடித்துச் சென்றதுடன், வாகன போக்குவரத்தையும் முடக்கியது. தொடர் மழையால் முக்கியமான சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் சேதமடைந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புத்துறை அதிகாரி ரிச்சர்ட் லெப்சா இது குறித்து கூறுகையில், "நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளதால், சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை காரணமாக நிலப்பரப்பு தளர்வடைந்திருக்கிறது. இதன் காரணமாக மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. தொடர் மழையால் புல்டோசர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை அடைவது தாமதமாகி வருகிறது என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications