"மிஷன் 136.." கர்நாடகாவில் மாறும் அரசியல் கிளைமேட்? எடியூரப்பாவை தனியாக சந்தித்த பிரதமர் மோடி
டெல்லி: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் முக்கிய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் பிரமதர் மோடியும் - எடியூரப்பாவும் பேசிக் கொண்டிருந்தது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது.
இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்தாண்டு இறுதியில் குஜராத்தில் பெற்ற மெகா வெற்றியுடன் உற்சாகமாக இறங்கும் பாஜக, அனைத்து தேர்தல்களிலும் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதற்காக அவர்கள் இப்போதில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர். தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து டெல்லியில் கூடியுள்ள பாஜக செயற்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கர்நாடகா
இந்த 9 மாநில தேர்தல்களில் கர்நாடகா ரொம்பவே முக்கியமானது. கடந்த தேர்தலில் கூட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த பிறகே ஆட்சியை பிடிக்க முடிந்தது. இந்த முறை அதைவிடப் பெரிய ரிஸ்க் எடுக்கிறது. கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரான எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் அவர்கள் தேர்தலைச் சந்திக்கிறார்கள். பிரதமர் மோடியின் இமேஜ் தேர்தலில் வெற்றியை உறதி செய்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆலோசனை
இருப்பினும், எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் இருப்பது ஒரு தரப்பு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கூட எடியூரப்பா அழைக்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியது. இந்தச் சூழலில் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிஎஸ் எடியூரப்பாவுடன் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் கர்நாடக முக்கியமானதாகும்.

பாஜக கூட்டம்
டெல்லியில் நடந்து வரும் இரண்டு நாள் கூட்டத்தின் தேர்தல் மாநிலங்களில் பாஜகவின் சாதனைகளை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தே அவர்கள் முக்கியமாக ஆலோசித்து வருகின்றனர். என்னதான் பாஜக வட இந்தியாவில் வலுவாக இருந்தாலும் கூட, தென்னிந்தியாவில் பாஜகவால் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியை அமைக்க முடிந்தது.. அங்கு பாஜக ஆட்சியை அமைக்க எடியூரப்பா முக்கிய காரணமாக இருந்தார். அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்த நிலையில், அவர் கடந்த 2021இல் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

எடியூரப்பா
லிங்காயத் சமூகத்தில் மிகப் பெரிய ஆதரவைக் கொண்டுள்ள எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அமைதியாகவே இருந்து வருகிறார்... அவர் மற்ற எந்த முக்கிய பதவியையும் ஏற்கவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எடியூரப்பா கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எடியூரப்பாவைப் பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சிலர் எடியூரப்பா கர்நாடக அரசியலில் முக்கிய இடத்தை பெறுவார் என்றும் கூறுகின்றனர்.

பசவராஜ் பொம்மை
ஏனென்றால், எடியூரப்பாவுக்குப் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற பசவராஜ் பொம்மை அரசு மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பாஜக ஆட்சியில் அங்கு ஊழல் தலைவிரித்து ஆடுவதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. குற்றச்சாட்டுகள் இப்படி அதிகரித்த போதிலும், கர்நாடக அரசியில் எந்தவொரு மாற்றத்தையும் பாஜக செய்யவில்லை. பசவராஜ் பொம்மை தலைமையிலேயே தேர்தல் சந்திக்க பாஜக ரெடியாகிவிட்டது.

அமித் ஷா
கர்நாடகாவில் மிஷன் 136 என்ற திட்டத்தை அமித் ஷா முன்னெடுத்துள்ளார். அங்கு மொத்தம் 224 இடங்கள் உள்ள நிலையில், அதில் குறைந்தது 136 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதே இந்த மிஷன் 136. இருப்பினும், அது பாஜகவுக்கு ரொம்பவே கடினமான ஒரு வேலையாகவே இருக்கும்.. ஏனென்றால், கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்து வருகிறது. அங்கு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஆதரவு இருப்பதால் இந்தத் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications