டிரம்பை முடக்கிய ட்விட்டர்... புதிய சாதனை படைத்த மோடி... பிரதமருக்கு மற்றொரு பெருமை
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகம் பின்தொடரப்படும் அரசியல்வாதி என்ற பெயரை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த 6ஆம் தேதி மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் ஒரு காவலர் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.
இந்த கலவரங்களுக்கு மத்தியில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.

டிரம்ப் ட்விட்டர் பக்கம் முடக்கம்
இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருவதாகக் கூறி, அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பை ட்விட்டரில் சுமார் 8.87 கோடி பேர் பின் தொடர்ந்து வந்தனர். உலகிலேயே அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல்வாதி என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார்.

பிரமதர் மோடி சாதனை
இந்நிலையில், தற்போது அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல்வாதி என்ற பெயர் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியை தற்போது ட்விட்டரில் 6.57 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதேபோல இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தற்போது 4.03 கோடி பேரால் பின் தொடரப்படுகிறது.

ஒபாமா
அதே நேரம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சுமார் 12.79 கோடி பேர் பின்தொடர்கின்றர். இருப்பினும், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், உலகிலேயே அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட அரசியல்வாதி என்ற பெயரை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் உள்ள அரசியல்வாதிகள்
அடுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனை 2.33 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2.42 கோடி பேரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.12 கோடி பேரும் தற்போது பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications