இன்று ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் கூட்டம்.. முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: இன்று ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக சிறப்புரை ஆற்ற உள்ளார்
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டம் காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் அரசு, தனியார் துறை, பொதுச்சமூகம் மற்றும் கல்வியாளர்களின் பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கூட்டத்தில் "கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பன்முகத் தன்மை: 75வது ஆண்டில் எத்தகைய ஐ.நா. சபை நமக்குத் தேவைப்படுகிறது" என்பதே பேசு பொருள் ஆகும். இந்த தலைப்பில் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
ஐநா சபை உருவாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவின் கருத்து எப்படி இருக்கும் என்பதை உலகின் பெருவாரியான நாடுகளின் உறுப்பினர்கள் கேட்கப்போகிறார்கள். 2021-22 ஆண்டுக்கான ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக வெற்றி பெற்றபின் பிரதமர் மோடி முதல் முறையாக பெருவாரியான உறுப்பினர்கள் மத்தியில் பேசப்போகிறார்.
கொரோனா தொற்றால் சர்வதேச சமூகம் மிகப்பெரிய இடர்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் பன்முகத் தன்மையினை வளர்த்தெடுக்க ஐநா முயற்சி செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.












Click it and Unblock the Notifications