திடீரென.. நாடாளுமன்றத்தில் நேரு, மன்மோகன்சிங்கை பாராட்டிய மோடி.. உற்று பார்த்த காங்கிரஸ்
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி, மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும் போது நாடாளுமன்றத்தின் பெருமைகள் குறித்து பேசினார். அப்போது முன்னாள் பிரதமர்களான நேரு, மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி பேசியது காங்கிரஸ் எம்.பிக்கள் இடையே கவனம் பெற்றது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடியது. 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் கடைசி கூட்டம் என்பதால் பிரதமர் மோடி அவை தொடங்கியதும் உரையாற்றினார். அப்போது, இந்திய நாடாளுமன்றத்தின் பெருமைகளை பற்றி எடுத்துரைத்து பேசினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்திற்கு நாம் விடை கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு இந்தியரின் வியர்வையாலும், பணத்தாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது. நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்.
நாடாளுமன்றம் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது அசைக்க முடியாது அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். உணர்வுபூர்வமான இந்த நிகழ்வுகளுக்கு நாடாளுமன்றம் சாட்சியாக இருந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை 600 பெண்கள் எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் ஜனநாயகத்திற்காக உழைத்து நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்" என்றார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரையும் பிரதமர் மோடி பாராட்டி பேசியது காங்கிரஸ் எம்.பிக்கள் இடையே கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications