மோடியை சந்தித்த இளையராஜா.. இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.. இசைஞானியை புகழ்ந்த பிரதமர்
டெல்லி: லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை வெற்றிக்கரமாக அரங்கேற்றிய பிறகு நாடு திரும்பிய ‛இசைஞானி' இளையராஜா இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார். அதுமட்டுமின்றி இளையராஜா குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை சமீபத்தில் அரங்கேற்றம் செய்தார். இளையராஜாவுக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இளையராஜா தனது சிம்பொனி இசை அரங்கேற்றம் பற்றிய விஷயங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடி, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நம்முடைய இசை மற்றும் காலசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ராஜ்யசபா எம்பியான இசை ஜாம்பவான் இளையராஜா. இவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இளையராஜா அனைத்து வகையிலும் முன்னோடியாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் சிம்பொனி வேலியண்டை அரங்கேற்றம் செய்து வரலாறு படைத்தார். இந்த நிகழ்ச்சி என்பது உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த மகத்தானை சாதனை என்பது அவரது இசைப்பயணத்தில் இன்னொரு அத்தியாயமாக அமைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடியுடன் மறக்க முடியாத சந்திப்பு நடத்தினேன். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதித்தோம். அதில் எனது சிம்பொனி வேலியண்ட்டும் அடக்கம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவை பணிவுடன் ஏற்கிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications