நெருங்கி வந்து விலகிச் சென்ற இரு துருவங்கள்!
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று நேருக்கு நேர் சந்தித்தும் எதுவும் பேசாமல் தத்தமது பாதையில் போனது சலசலப்பை ஏற்படுத்தியது.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு பலத்த சரிவை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ். கிட்டத்தட்ட பாஜகவின் இதயத்தில் விழுந்த அடி இது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத் தீவிரவாதத் தாக்குதல் நினைவு தினம் டெல்லியில் அனுசரிக்கப்பட்டது.

அதில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கிட்டத்தட்ட அருகருகே பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் நின்றிருந்தனர். ஆனால் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை , பேசிக் கொள்ளவும் இல்லை.
அதேசமயம் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சென்று பேசினார். அதேசமயம், மத்திய அமைச்சர்கள் விஜய் கோயல், ராமதாஸ் அத்வாலே ஆகியோர் ராகுல் காந்தியுடன் கை குலுக்கிப் பேசினர்.

சோனியா காந்தி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ஐந்து டெல்லி போலீஸார், ஒரு மத்திய ரிசர்வ் படை பெண் போலீஸ், 2 நாடாளுமன்ற ஊழியர்கள், ஒரு தோட்டக்காரர், ஒரு கேமராமேன் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications