அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.. டெல்லி ஏர்போர்ட்டில் மனம் திறந்த மோடி
Recommended Video
டெல்லி: 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்த அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை என்று டெல்லி விமானநிலையத்தில் பிரதமர் மோடி உருக்கமாக நினைவுகூர்ந்து பேசினார்.
கடந்த வாரம் அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பேசினார்.. அந்த கூட்டத்தில் அதிரபர் ட்ரம்பும் உரையாற்றினார். பின்னர் நியூயார்க்கில் அதிபர் டிரம்பை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார்.
பின்னர் அமெரிக்க வாழ் தொழில்அதிபர்களையும சந்தித்து பேசினார். அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளையும், இந்தியாவின் ஒற்றுமை உணர்வையும் பறை சாற்றி பேசினார்.

உற்சாக வரவேற்பு
இதையடுத்து ஒரு வார அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாடு திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று வரவேற்றார்.

உலக அரங்கில் இந்தியா
நாடு திரும்பியதும் உற்சாகமாக காணப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், "உலக அரங்கில் இந்தியாவின் பெருமை குறித்து பேச வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நான் ஐநா சபை சென்று இருந்தேன். அப்போது இருந்ததுக்கும் இப்போது அவர்கள் காட்டும் அணுகுமுறைக்கும் பெரிய மாற்றத்தை நான் உணர்ந்தேன்.

இந்தியாவின் மதிப்பு உயர்வு
ஐநா அவையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது. இந்தியாவின் மீதான அவர்களது பார்வை மாறியுள்ளது. இதற்கு இங்குள்ள 130 கோடி மக்கள்தான் காரணம். கடந்த மூன்று வருடம் முன்பு இதே செப்டம்பர் 28ம் தேதி அன்று நான் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். ஒவ்வொரு நிமிடமும் தொலைப்பேசி மணி எப்போது ஒலிக்கும், என்று அழைப்புக்காக இரவு முழுவதும் விழித்துக்கொண்டு காத்திருந்தேன்.

இந்தியாவின் வலிமை
ஏனெனில் 3 ஆண்டுகளுக்கு முன் அன்று தான் துணிச்சலான நம் ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை (துள்ளிய தாக்குதல்) வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.. அதை முடித்த நமது ராணுவ வீரர்களுக்கு வணக்கம் இதன் மூலம் இந்தியாவின் வலிமை உலகுக்கு உணர்த்தப்பட்டது" என்றார். முன்னதாக ஜம்மூ காஷ்மீரின் உரியில் 2016 செப்டம்பர் 18ம் தேதி 19 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications