குற்ற உணர்ச்சி வேண்டாம்.. சமரசமும் வேண்டாம்.. மென்மையும் வேண்டாம்... முதல்வர்களிடம் மோடி பேச்சு
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், சமூக இடைவெளியில் சமசரம் செய்து கொள்ளாமல் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Recommended Video
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த மார்ச் 24ம் தேதி இரவு திடீரென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன்பிறகு ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் நாட்டு மக்கள் மத்தியில் தோன்றி பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3 வரை 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.

ஊரங்கு தளர்வு
எனினும் சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகள், கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தார். இதன்படி விவசாய கூலி வேலை செய்வோர், பிளம்பர், கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு பணிகள் செய்வோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோல் சில வகை தொழிற்சாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.

கடைகளுக்கு அனுமதி
இதன்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் படிப்படியாக தளர்வு அளித்து வருகின்றன. பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கிராமப்புறங்களில், ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

லாக்டவுன் நீட்டிப்பா
இந்நிலையில பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவிய பின்னர் மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக பிரதமர் இன்று வீடியோ கான்பிரன்சிங் முறையில் பேசினார். இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீக்கிவிட்டு பொருளாதார நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். சில மாநில முதல்வர்கள் ஊரடங்கில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை தளர்த்தக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

சமூக இடைவெளி அவசியம்
இதையடுத்து பிரதமர் மோடி முதல்வர்கள் மத்தியில் பேசுகையில்,"பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதேநேரம் சமூக இடைவெளியில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக முககவசம் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஒருபுறம், உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்., மறுபுறம் நிதி அம்சங்களிலும் நாம் சமமாக கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியது ஒருபுறம், மறுபுறம் வைரஸை எதிர்ப்பதற்கான நம் தீர்மானத்தையும் வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

லாக்டவுன் சிறந்த பங்கு
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்து வருகிறதென்றால் குற்ற உணர்ச்சியாக உணர வேண்டாம் என்று பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் கூறினார். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளின் கூட்டு முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் லாக்டவுன் ஒரு சிறந்த பங்கைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உங்களுக்கு தெரியும்
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ஒரு பெரிய நகரத்தின் சில பகுதிகள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், பெரிய நகரத்தின் பிற பகுதிகளை சிவப்பு மண்டலம் ஆகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் களத்தில் உள்ள உண்மைகளை நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள்(முதல்வர்கள்) நிலைமையை சிறப்பாக மதிப்பிட முடியும். பலர் ஒரு சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்துவது ஒரு குற்றம் அல்லது பாவம் அல்ல.. அத்தகைய நபர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது

சமாளிக்க முயற்சிப்போம்
கொரோனா விஷயத்தில் ஒருபுறம் நாம் மிகவும் மென்மையாக இருக்க முடியாது. நாம் அதிக மென்மையைக் காட்டினால், நாம் அந்த பகுதியை தெரிந்தே பாதிக்க அனுமதிக்கிறோம் என்பதாகிவிடும். உங்கள் மாநிலத்தில் ஏராளமான நோயாளிகள் இருந்தாலும், அது பெரியதாக கருதப்படாது என்று அனைத்து முதல்வர்களிடமும் நான் மனத்தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். இந்த உணர்வை விரும்பவில்லை. நாம் சமாளிக்க முயற்சிப்போம். உங்கள் மாநிலத்தில் எண்ணிக்கை அதிகரித்தால் பயப்பட வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications