நாளை ரஷ்யா செல்கிறார் மோடி.. புடினுடன் சந்திப்பு.. இந்திய ஊழியர்கள் 'ஏற்றுமதி' பற்றியும் ஆலோசனை
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நாளை முதல் இரு நாட்கள் ரஷ்யாவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார். அப்போது அவர் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு (இஇஎஃப்) கூட்டத்தில் பங்கேற்பார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே பேட்டியளித்தார். அவர் கூறுகையில், இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு சிறப்பு உறவு இருக்கிறது.
அணுசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கும் அப்பால், ரஷ்யாவுடனான உறவை, பொருளாதாரத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பிரதமர் விரும்புகிறார்.
அயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஊழியர் ஏற்றுமதி
எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தியாவுக்கு விருப்பமுள்ள துறைகளில் ஒன்றாகும். ஒரு நாடு அல்லது பிராந்தியத்தை மட்டுமே நாம் இறக்குமதிக்கு, சார்ந்து இருக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம். மனிதவள பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு நமது நாட்டிலிருந்து திறமையான ஊழியர்களை அனுப்புவதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல. பல நாடுகளில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சி இது. இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது, ரஷ்யாவிடமிருந்து பாசிட்டிவ் பதில் வந்துள்ளது.
சென்னை கப்பல் இணைப்பு
ரஷ்ய கிழக்கின் பெரும்பகுதி தாதுக்கள் அல்லது விவசாயத் துறைகள் சார்ந்தவை. பிரதமரின் சுற்றுப் பயணத்திற்கு பிறகு அது பற்றியும் ஆராய்வோம். இது நமக்கு முக்கியமானது, இதற்கு முன்னுரிமையை தருவோம். சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் இடையே கப்பல் இணைப்பை உருவாக்கும் திட்டம் பற்றி, உடனடியாக எந்த அறிவிப்பும் இருக்காது.
ஐரோப்பாவிற்கு புது பாதை
"வடக்கு பாதை வழியாக ஐரோப்பாவிற்கு மாற்று கப்பல் போக்குவரத்து, பாதை ஏற்படுத்த இப்போது ஒரு சாத்தியக்கூறு உள்ளது, மேலும் அது நமக்கு கொண்டு வரக்கூடிய பொருளாதார நன்மைகள் எப்படியானதாக இருக்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் இப்பகுதியில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உச்சிமாநாடு
மோடி நாளை காலை விளாடிவோஸ்டாக் நகரம் செல்கிறார். செப்டம்பர் 5 மாலை புறப்படுவார். முதல் நாளில், மோடியும் புடினும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 20வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள். பின்னர் மோடியும் புடினும் அங்குள்ள முக்கியமான கப்பல்கட்டும் யார்டு பகுதிக்கு செல்வார்கள். பனி உடைப்பு மற்றும் எண்ணெய் டேங்கர்கள் உள்ளிட்ட கப்பல்களை உருவாக்கும் ஆலை இதுவாகும்.
பிற நாட்டு தலைவர்கள்
இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 5 ம் தேதி இருதரப்பு சந்திப்புகளுக்கு ஈ.இ.எஃப் கூட்டத்திற்கு வரும் தலைவர்களுடன் மோடி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. மோடி மற்றும் புடின் அந்த நாட்டின் முக்கியமான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியையும் கண்டுகளிப்பார்கள்.