வருமான வரி, ஜிஎஸ்டி குறைப்பு.. மத்திய அரசின் இரட்டை தீபாவளி பரிசுகள்.. பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: நாளை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் சூழலில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பொதுமக்கள் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. 4 அடுக்கு வரி முறை நீக்கப்பட்டு, இரு அடுக்கு வரி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வரும் சூழலில், முன்னதாக இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி இது தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "நாளை நவராத்திரி தொடங்கும் நிலையில், புதிய ஜி.எஸ்.டி வரிகள் அமலாகவுள்ளன.. அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி மூலம் ஏழைகள், வியாபாரிகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்.. இந்த புதிய ஜிஎஸ்டி இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.. மேலும் வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.
நாளை அமலாகும் புதிய ஜி.எஸ்டி என்பது பண்டிகைக் காலச் சேமிப்பு என்றும் கூட சொல்லாம்.. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து புதிய நேரடி முதலீடுகளும் நிச்சயம் அதிகரிக்கும். ஜிஎஸ்டி மூலம் நாளை முதல் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும்.. உங்களுக்குப் பிடித்த பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கலாம்.. நாட்டில் உள்ள ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், விவசாயிகள் இளைஞர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும்.
சேமிப்பை அதிகரிக்கும்
புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வரும் நிலையில், இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் ஆரம்பிக்கிறது. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மைகளை உண்டாக்கும். நாளை நாடு முழுக்க நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் நாடு ஆத்ம நிர்பார் பாரத் அபியானை நோக்கி ஒரு மிகப் பெரிய அடியை எடுத்து வைக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மறைமுக வரி இருந்தது. இதனால் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்குப் பொருட்களை அனுப்பி, அதை ஐரோப்பாவுக்கு அனுப்பி, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்பி வந்தன. மறைமுக வரி எவ்வளவு சிக்கலாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.
ஏகப்பட்ட சிக்கல்கள்
முன்பு வரி விவகாரத்தில் பல சிக்கல்களைக் கடக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றியுள்ளோம். தொழில் செய்ய இருந்த தடைகளை அகற்றி இருக்கிறோம். பல வகையான வரிகளை நீக்கி ஜிஎஸ்டியை கொண்டு வந்தோம். இப்போது ஜிஎஸ்டியில் மறுசீரமைப்பைக் கொண்டு வந்திருக்கிறோம். இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும்.. நீங்கள் விரும்பும் பொருட்களை எளிதாக வாங்க முடியும்.
இப்போது 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.. இதனால் அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி கணிசமாகக் குறையும்.. 2017ல் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மூலம் ஒரு மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்கினோம். இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு
புதிய ஜிஎஸ்டி மூலமாக 2.5 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பார்கள். இந்தியர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் வகையில் இந்த புதிய தலைமுறை ஜிஎஸ்டி உள்ளது. பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து ஜிஎஸ்டியை கொண்டு வந்திருக்கிறோம். அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்ததன் மூலம் இவ்வளவு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்,












Click it and Unblock the Notifications