"வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.." உ.பி.-இல் நின்றபடி திமுக மீது பாய்ந்த பிரதமர் மோடி! கடும் தாக்கு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கங்கை விரைவுச் சாலையின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அதிக தொகுதிகளைக் கிடைப்பதை திமுக தடுப்பதாகவும் அந்த திமுகவுடன் இணைந்து சமாஜ்வாடி கட்சி அரசியல் செய்வதாகவும் பிரதமர் மோடி சாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய மாநில அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இப்போது அங்குக் கங்கை விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கங்கா விரைவுச்சாலை என்பது 594 கி.மீ. நீளமுள்ள, ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஒரு புதிய நெடுஞ்சாலையாகும். இதைப் பிரதமர் மோடி நேற்று ஏப்ரல் 29ம் தேதி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி
12 மாவட்டங்கள் வழியாக மீரட்டை பிரயாக்ராஜுடன் இணைக்கும் இந்த சாலை, உத்தரப் பிரதேசத்தின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையாகும். பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த சாலை அமைத்துள்ளனர். இது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, தனது உரையில் உபி எதிர்க்கட்சியான சமாஜ்வாதியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், "உத்தரப் பிரதேசம் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை; அவர்கள் மாநிலத்தைப் பழைய இருண்ட காலத்திற்கே தள்ள நினைக்கிறார்கள்" என்று அவர் அதிரடியாகப் பேசினார்.
திமுக மீது தாக்கு
சமாஜ்வாதி கட்சி வளர்ச்சிக்கு எதிரானது மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டது என்றும் பிரதமர் குற்றம் சாட்டினார்.. 2029 முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைச் சமாஜ்வாதி கட்சி எதிர்த்து வாக்களித்தாக பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்த நிகழ்வுகள் அக்கட்சியின் உண்மையான முகத்தை மக்களுக்குக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மறைமுகமாகப் பிரதமர் மோடி சாடினார்.
திமுகவுக்கு பிடிக்கவில்லை
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்கள்.. ஆனால் அங்கு உபி மாநிலத்தை இழிவுபடுத்துபவர்களுடன் நிற்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை எதிர்க்கும் திமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து சமாஜ்வாதி அரசியல் செய்கிறது.. இத்தகைய அரசியல், சமூகத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு போக்கைப் பிரதிபலிக்கிறது. உத்தரப் பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்பவர்கள், அதே மாநிலத்தைத் திட்டுபவர்களுடன் நிற்பது என்ன நியாயம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
உத்தரப் பிரதேசம்
மேலும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், "ஒரு காலத்தில் குழிகள் நிறைந்த சாலைகளே உ.பி-யின் அடையாளமாக இருந்தன; ஆனால் இன்று அதிக விரைவுச் சாலைகள் கொண்ட மாநிலமாக இது மாறியுள்ளது. இந்தியா இன்று உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இருப்பதில் உ.பி-யின் பங்கு அதிகம். இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மொபைல்களில் கிட்டத்தட்டப் பாதி இங்குதான் தயாராகின்றன. நொய்டாவில் செமிகண்டக்டர் ஆலை மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மூலம் மாநிலம் ஒரு தொழில்துறை மையமாக உருவெடுத்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications