ஸ்டார்ட் அப் உலகில் இந்தியா நம்பர் 3.. போன் உற்பத்தியில் நாம்தான் டாப்.. பிரதமர் மோடி ராஜ்ய சபா உரை!
டெல்லி: உலகில் இந்தியாதான் போன் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது, ஸ்டார்ட் அப் உலகில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் குறிப்பிட்டுள்ளார் .
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி இந்த தீர்மானம் மீது உரையாற்றினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
நேற்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில் இன்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றிய வருகிறார்.

மோடி உரை
பிரதமர் மோடி மாநிலங்களவையில் நிகழ்த்திய உரையில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதில், அடுத்த 25 வருடங்களுக்கு ஏற்றபடி நாம் திட்டங்களை வகுக்க வேண்டும். 100வது சுதந்திர ஆண்டை சிறப்பாக கொண்டாட நாம் உழைக்க வேண்டும் . இதற்கு முன் நாம் செய்த தவறுகளை நாம் சரி செய்ய வேண்டும். புதிய சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

புதிய திட்டம்
புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. கொரோனா காலத்தில் கிராமங்களில் உள்ள 5 கோடி குடும்பங்கள் குடிநீர் வசதி பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

இலவச ரேஷன்
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியா 100 சதவிகித வேக்சின் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா வேக்சின் போடுவதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் பல நலத்திட்டங்களை அரசு மேற்கொண்டு உள்ளது . கொரோனா காலத்திலும் இந்திய இளைஞர்கள் உலக அளவில் சாதனைகளை படைத்தனர். விளையாட்டு தொடங்கி கல்வி வரை பல துறைகளில் இந்திய இளைஞர்கள் சாதனைகளை படைத்தனர்.

கொரோனா காலம்
விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் எம்எஸ்பி தொகை செலுத்தப்பட்டு வருகிறது. முதல்முறை இப்படி பணம் செலுத்தப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. உலகில் இந்தியாதான் போன் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் காரணம். ஸ்டார்ட் அப் உலகில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்திய இளைஞர்கள்தான் இந்த சாதனைக்கு காரணம், இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications