கொரோனா பரவலைத் தடுக்க ஒரே ஒருவழி தடுப்பூசி போடுவது மட்டுமே.. பிரதமர் மோடி
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஒருவழி கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதுதான் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலையுடனான 24 மணிநேர நிலவரப்படி நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,47,417.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,17,531. மொத்த கொரோனா பாதிப்பில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 3.08 சதவீதமாக உள்ளது. மேலும் நேற்று 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 என அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.59 சதவீதம். கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 13.11 சதவீதம் ஆகும். கொரோனா வாராந்திர பாதிப்பு விகிதம் 10.80 சதவீதம் ஆகும். தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பு
இதுவரை மொத்தம் 69.73 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 5,488 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,367 பேருக்கும், ராஜஸ்தானில் 792, பேருக்கும், தொற்று ஏற்பட்டு மகாராஷ்டிராவில் 734 பேரும், ராஜஸ்தானில் 510 பேரும், குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி திட்ட செயல்பாடு ஆகியவை தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

ஒரே வழி தடுப்பூசிதான்
முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மக்களை பாதித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருவிழா காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். வீடுகளில் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை மக்கள் தோற்கடிப்பார்கள்; கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க ஒரேவழி தடுப்பூசி மட்டுமே. தற்போதைய நிலையில் மாநிலங்களிடம் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் விரைவாகப் போடப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications