கொத்து கொத்தாக பரவும் கொரோனா - ஏப்.8ல் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வரும் 8ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அக்கூட்டத்தின் போது மீண்டும் அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,679,958 பேர் குணமாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
பாரத ஸ்டேட் வங்கியின் நிபுணர் குழு கொரோனா 2 வது அலை குறித்து ஆய்வு செய்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கொரோனா 2வது அலை ஏப்ரல் நடுவில் உச்சத்தை தொடும் என்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஒரு லட்சம் பேர் பாதிப்பு
இதைத் தொடர்ந்து கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால், கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்து தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஏப்ரல் 15 முதல் 20ஆம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும். அப்போது நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையை தாண்டவும் வாய்ப்புள்ளது.

ஏப்.10க்கு மேல் பாதிப்பு
மே இறுதியில் வைரஸ் பரவல் கணிசமாகக் குறையும். அடுத்த 4 நாட்களில் பஞ்சாபில் வைரஸ் பரவல் உச்சத்தை தொடக்கூடும். ஏப்ரல் 10ஆம் தேதி அளவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட கொரோனா
அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது போல இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது.

11 மாநில முதல்வர்கள்
இந்த சூழலில் கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மோடி ஆலோசனை
இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை மறுநாள் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications